பெரியார் சிறை புகும் காட்சி! கசிந்துருகும் தமிழ்த் தென்றல் திரு.வி.க.
திரு. ஈ.வெ.இராமசாமி நாயக்கர் கடுங்காவல் தண்டனை ஏற்று, சிறைக் கோட்டம் நண்ணினர். வெள்ளிய தாடி அசைய, மெலிந்த தோல் திரங்க, இரங்கிய கண்கள் ஒளிர, பரந்த முகம் மலர, கனிந்த முதுமை ஒழுக ஒழுகத், தாங்கிய தடியுடன்,
திரு நாயக்கர் சிறை புகுந்த காட்சி, அவர்தம் பகைவர், நொதுமலர், நண்பர் எல்லாருள்ளத்தையும் குழையச் செய்திருக்கும் என்பதில் அய்யமில்லை.
முதுமைப் பருவம்! காவல்! கடுங்காவல்! என்னே! இந்நிலையை உன்ன உன்ன உள்ளம் உருகுகிறது. திரு நாயக்கருடன் மிக நெருங்கிப் பழகிய சிலர் மந்திரிப் பதவியில் வீற்றிருக்கின்றனர். அவர்தம் மனமும் கசிந்தேயிருக்கும். வயதின் முதிர்ச்சி எவரையும் அலமரச் செய்யும்.
(‘நவசக்தி’, 9.12.1938 – தலையங்கம்)






Reviews
There are no reviews yet.